எலான் மஸ்க் நாடு கடத்தப்படுவாரா? மழுப்பலாக பதில் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்!

மஸ்க்கை நாடு கடத்த முடியுமா எனத் தெரியாது. அதற்கான சாத்தியக் கூறுகளை பார்க்க வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

musk vs trump

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட மோதல், மஸ்க்கை நாடு கடத்துவது குறித்த கேள்விக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஜூலை 1 அன்று பத்திரிகையாளர்கள், “மஸ்க்கை நாடு கடத்துவீர்களா?” என்று கேட்டபோது, ட்ரம்ப், “அதைப் பற்றி தெரியவில்லை, அதைப் பார்க்க வேண்டும்,” என்று மழுப்பலாக பதிலளித்தார்.

இது குறித்து பேசிய அவர் ” மஸ்க்கை நாடு கடத்த முடியுமா எனத் தெரியாது. அதற்கான சாத்தியக் கூறுகளை பார்க்க வேண்டும். எலான் மஸ்கின் நிறுவனங்கள் தொடர்பாக DOGE அமைப்பை விசாரிக்கச் சொல்லலாம். நிறைய சலுகைகளை அவர் பெற்று வருகிறார். அரசு செலவினத்தை குறைக்க மஸ்க் தலைமையில் தொடங்கப்பட்டது DOGE அமைப்பு. கடந்த மே மாதம் அதிலிருந்து மஸ்க் வெளியேறினார்” எனவும் தெரிவித்தார்.

இந்த பதில், மஸ்க்கின் அமெரிக்க குடியுரிமை மற்றும் அவரது டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் எதிர்காலம் குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தப் பிரச்சனை, ட்ரம்ப் முன்மொழிந்த “ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்” என்ற வரவு-செலவு மசோதாவை மஸ்க் “மோசமானது” என்று விமர்சித்ததால் தொடங்கியது.

இந்த மசோதா அமெரிக்காவின் கடனை 3 ட்ரில்லியன் டாலர்கள் உயர்த்தும் என்று மஸ்க் கூறினார். இதற்கு கோபமடைந்த ட்ரம்ப், மஸ்க்கின் நிறுவனங்களுக்கு அரசு கொடுக்கும் பண உதவிகளையும் ஒப்பந்தங்களையும் ரத்து செய்யலாம் என்று எச்சரித்தார். “மஸ்க் அரசு உதவி இல்லாமல் தனது நிறுவனங்களை நடத்த முடியாது, இல்லையெனில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்குத் திரும்ப வேண்டியிருக்கும்,” என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டார்.

எலான் மஸ்க் 1971இல் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். 1990களில் அமெரிக்காவுக்கு J-1 விசாவில் வந்து, பின்னர் H1-B விசா மூலம் 2002இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். “நான் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை,” என்று மஸ்க் தெளிவாகக் கூறினார். ஆனால், ட்ரம்பின் ஆதரவாளரான ஸ்டீவ் பானன், மஸ்க்கின் குடியுரிமை குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த மஸ்க், ட்ரம்பின் மசோதாவை எதிர்க்க “அமெரிக்க கட்சி” என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவது பற்றி யோசிப்பதாகக் கூறினார்.

இந்த மோதல், ட்ரம்பின் 2024 தேர்தல் வெற்றிக்கு மஸ்க் 275 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்து, அவரது அரசு செலவு குறைப்பு துறையை (DOGE) வழிநடத்திய பின்னணியில் நடந்தது. மஸ்க், 2026 இடைத்தேர்தலில் ட்ரம்புக்கு எதிரான வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கலாம் என்று எச்சரித்தார். அதேநேரம், ட்ரம்ப், மஸ்க்கின் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளார்.  எனவே இருவருடைய வாக்குவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்