வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வங்கதேசத்தின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், நீதிபதி எம்.டி. கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 இன் மூன்று பேர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியதாக பங்களாதேஷின் முக்கிய ஆங்கில நாளிதழான டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹசீனாவுடன் சேர்ந்து, அதே அவமதிப்பு தீர்ப்பின் கீழ், கைபந்தாவில் உள்ள கோபிந்தகஞ்சைச் சேர்ந்த ஷகில் அகந்த் புல்புலுக்கும் இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. புல்புல், டாக்காவைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர் மற்றும் அவாமி லீக்கின் மாணவர் பிரிவான பங்களாதேஷ் சத்ரா லீக் (BCL) உடன் தொடர்புடையவர்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதன் பிறகு, எந்தவொரு வழக்கிலும் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவது இதுவே முதல் முறை. இதனிடையே, வங்கதேச அரசு ஹசினாவை இந்தியாவிலிருந்து நாடு கடத்த கோரிக்கை விடுத்துள்ளது, மேலும் அவரது மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.