அகமதாபாத் விபத்து : விமானத்தில் இருந்து எத்தனை பேர்? காவல்துறை விளக்கம்!
விபத்தில் படுகாயங்களுடன் பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அகமதாபாத் : விமான நிலையத்திற்கு அருகே எயர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளான தகவலை மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை உறுதிப்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான இந்த விமானம், 242 பயணிகளுடன் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்து இன்று (ஜூன் 12, 2025) பிற்பகல் 1:38 மணிக்கு புறப்பட்டு, 1:40 மணிக்கு நிகழ்ந்ததாக ஆரம்ப தகவல்கள் கூறுகின்றன. விமானம் ஒரு போயிங் 787-8 ட்ரீம்லைனர் (பதிவு எண் VT-ANB) ஆகும், இது 11.5 ஆண்டுகள் பழமையானது. விமானம் டேக்-ஆஃப் செய்யும் போது ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழுந்ததாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்திலிருந்து கரும்புகை எழுவதாகவும், அருகிலுள்ள கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள், அவசர மீட்பு குழுக்கள் மற்றும் மருத்துவ உதவி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் , 12 முதல் 24 அவசர மருத்துவ வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, படுகாயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள் என்கிற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
முன்னதாக விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்கிற தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது பயணிகள் மற்றும் பணியாளர்கள் சேர்த்து மொத்தம் 242 இருந்ததாக மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை உறுதி செய்துள்ளது. அதில் 12 விமான பணியாளர்களும் அடங்குவார்கள். அதே சமயம் உயிரிழப்பு அல்லது காயமடைந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் அது பற்றி தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.