“ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்” – அமித் ஷா.!
ஆங்கிலத்தில் பேசும் இந்தியர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என்று டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார்.

டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் ‘மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ” நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள், அத்தகைய சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று கூறினார்.
மேலும், “மாற்றம் சாத்தியமில்லை என்று நினைப்பவர்கள், உறுதியான மக்களால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதை மறந்துவிடுகிறார்கள். நமது மொழிகள் நமது கலாச்சாரத்தின் ரத்தினங்கள், அவர்கள் இல்லாமல் நாம் இந்தியர்களாக இருக்க முடியாது” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”இந்தியா, அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மதத்தைப் புரிந்துகொள்ள வெளிநாட்டு மொழிகள் ஒருபோதும் போதுமானதாக இருக்காது. முழுமையற்ற வெளிநாட்டு மொழிகள் மூலம் இந்தியாவை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.
இந்தப் போராட்டம் எளிதானது அல்ல என்பது எனக்குத் தெரியும், ஆனால் இந்திய சமூகம் நிச்சயமாக இந்தப் போரில் வெற்றி பெறும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். நமது சொந்த மொழிகளில் சுயமரியாதையுடன் நாட்டை நடத்துவோம், உலகையே வழிநடத்துவோம்” என்றுகூறியிருக்கிறார்.