ஒடிசா ரயில் விபத்து சம்பவம்…பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை.!

ஒடிசா ரயில் விபத்தில் மீட்பு பணிகள் குறித்து உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதிய பெரும் விபத்தில், மீட்புப்பணிகள் மற்றும் நிலைமை குறித்து ஆய்வுசெய்ய உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார், பிரதமர் மோடி தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். ஒடிசா விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 650 பேர் கோபால்பூர், காந்தபரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி இன்று விபத்து நடந்த பாலசோருக்கு செல்கிறார். மற்றும் கட்டாக்கிற்கும் சென்று மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்திக்கவுள்ளார்.
பிரதமர் மோடி ஏற்கனவே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்குவதாக அறிவித்திருந்தார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் ஹெலிகாப்டர் மீட்புக்குழுவும் ஈடுபட்டன. தற்போது மீட்புப்பணிகள் நிறைவடைந்து, சீரமைப்புப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.