நாங்கள் ஒன்றாகப் போராட விரும்புகிறோம்…எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு முன்னதாக கார்கே பேச்சு.!

எதிர்க்கட்சிகள் நாங்கள் ஒன்றாக இணைந்து போராட விரும்புகிறோம் என மல்லிகார்ஜுன் கார்கே கூறியுள்ளார்.
பாட்னாவில் இன்று அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியுடன் கலந்து கொள்கிறார். கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை அகற்றுவதுதான் எதிர்க்கட்சிகளின் செயல்திட்டம் என்றும், அனைவரும் இதற்காக ஒன்றிணைந்து போராடுவோம் என்றும் கூறினார்.
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் (ஐக்கிய) தலைவருமான நிதிஷ் குமார், 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக வியூகத்தை வகுப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து பாஜகவுக்கு எதிரான ஒருமித்த கருத்துகளைக் கொண்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் ஜனநாயக கட்சி (PDP) தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள பாட்னா வந்தடைந்தனர்.
கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, நாங்கள் அனைவரும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட விரும்புகிறோம், பாஜக அரசை அகற்றுவதே எங்கள் நோக்கம். மேலும் டெல்லியில் மத்திய அரசின் அவசரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது குறித்து பேசிய கார்கே, நாங்கள் இது தொடர்பாக ஆம் ஆத்மியை ஆதரிப்பது பற்றி பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக முடிவெடுப்போம் என்றும் அவர் மேலும் கூறினார்.