ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கு : குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி!
திருவள்ளூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக சந்தேகப்படும் நபரின் தெளிவான புகைப்படத்தையும் காவல்துறை வெளியிட்டிருந்தது.

திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளியை விரைவில் கைது செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குற்றவாளியை கைது செய்ய, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் தகவல்களின் அடிப்படையில், குற்றவாளி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்து 9 நாட்கள் ஆகியும், இன்னும் குற்றவாளியை போலீசாரால் கைது செய்யமுடியவில்லை. இந்நிலையில், குற்றவாளியின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை காவல்துறை வெளியிட்டு, அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி, குற்றவாளி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 99520 60948 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தமிழக-ஆந்திர எல்லையில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள். இதனையடுத்து, குற்றவாளியின் தெளிவான புகைப்படத்தை வெளியிட்டது மட்டுமின்றி தேடப்படும் நபர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு வெகுமதி வழங்கப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் நபர் குறித்து நம்பகமான தகவல் வழங்குவோருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமின்றி, சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.