யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம்… உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கோயிலின் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்றால், யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகும் உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அர்ச்சகர் பணிநியமனத்திற்கு விளம்பர அறிவிப்பு வெளியாகியிருந்தது, இதைஎதிர்த்து அந்த கோயிலின் முத்து சுப்ரமணிய குருக்கள் தொடர்ந்த வழக்கில், நீதிபதி சம்மந்தப்பட்ட கோயிலின் ஆகம முறைகள் படித்திருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்றும், அந்த கோயில் ஆகம விதிகளுக்குட்பட்டதா இல்லையா என்பதை பொறுத்து முடிவுசெய்யவேண்டும் எனவும் உத்தரவு அளித்திருந்தார்.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, ஆதிகேசவராவ் அமர்வு விசாரித்த நிலையில், குருக்கள் தரப்பில் பரம்பரையாக வழிவருபவர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்றும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் தமிழக அரசு சார்பிலும், ஆகம விதிகளை பின்பற்றும் மற்றும் பின்பற்றாத கோயில்கள் எவை என்பதை குழு நியமிக்கப்பட்டு கண்டறிந்து வருகிறது எனவும் அதுவரை தடை பிறப்பிக்க கூடாது எனவும் வாதம் வைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசும் அறநிலையத்துறையும் இந்த வழக்கில் விளக்கம் அளிக்க கோரி, நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.