சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!
சொந்த மகளையே தந்தை கழுத்தை அறுத்த கொலை செய்த சம்பவம் சிதம்பரம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற நபர் வசித்து வந்துள்ளார். அவருடைய மகள் அபிதா என்ற இளம் பெண்ணுக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக போய்க்கொண்டு இருந்தது. இப்படியான சூழலில் திடீரென அர்ஜுனன் தன்னுடைய மகள் அபிதாவை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
சம்பவ இடத்திலே அபிதா துடி துடித்து உயிரிழந்த நிலையில், மகளை கொன்றுவிட்டு அர்ஜுனன் தலைமறைவானார். பிறகு இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருகை தந்தனர். பிறகு அபிதாவின் உடலை பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.
முதற்கட்டமாக கொடூரமான கொலையை செய்துவிட்டு தலைமறைவான அர்ஜுனனை போலீசார் தேடினார். தீவிரமாக அவர் தேடப்பட்டு வந்த நிலையில், காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார். காதல் விவகாரத்தால் அவர் தன்னுடைய மகளை கொலை செய்ததாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் போலீசார் காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்கிற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். விசாரணை நடந்து முடிந்த பிறகு கொலைக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகும்.