கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை வீசிய விவகாரம்.. 3 பேர் பணியிடை நீக்கம்!

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை சவக்குழியில் தூக்கி வீசிய விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார்.
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த ஜோதிமுத்து என்பவர் புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்பொழுது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இறந்தவருக்கு உறவினர்கள் இருந்தும், இறுதி சடங்குகள் செய்ய யாரும் முன்வராத நிலையில் அவரின் உடல், கோபளம்கடை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரின் உடலை 15 அடி ஆழமுள்ள புதைகுழியில் சுகாதார துறை ஊழியர்கள் வீசி சென்ற நிகழ்வு, சர்ச்சையானது.
இதற்கிடையே புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் கூறுகையில், புதுச்சேரியில் கொரோனா தோற்றால் மரணம் என்பதால் ஊழியர்கள் பதற்றத்தில் இருந்ததாக தெரிவித்தார். இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை சவக்குழியில் தூக்கி வீசிய விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.