எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!
துயரமே இபிஎஸ்-க்குதான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது.ஒரு பக்கம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை குறித்து விமர்சனம் செய்து பேசி வருவது போலவும் மற்றோரு பக்கம் திமுகவை சேர்ந்தவர்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், திமுக ஆட்சியில் மக்கள் துயரமாக இருக்கிறார்கள் என்பது போல சமீபத்தில் விமர்சித்து பேசியிருந்தார். அவருடைய பேச்சு குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு ” அவர் பேசியதை பற்றி நீங்கள் மட்டும் தான் தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டுக்கொண்டு வருகிறீர்கள்.
நீங்களும் மக்கள் தான் உங்களால் தான் ஒட்டு போட முடியும். எனவே, மீளாத துயரத்தில் இருந்தீர்கள் என்றால் எப்படி உங்களால் காலையில் எழுந்து இங்கு வர முடியும்? என்னை பொறுத்தவரையில் துயரமே எடப்பாடிக்கு தான். அடுத்த 2026 சட்டமன்ற தேர்தலில் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் நுழையமுடியாது என்கிற துயரத்தில் தான் எடப்பாடி இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார். அவருடைய வாயில் இருந்து மங்களகரமாக வரும் வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு 4 வருடங்கள் ஆகிவிட்டது.
எனவே, அவருடைய வாயில் இருந்து வரும் வார்த்தைகளை பற்றி நாம் கவலையே படவேண்டாம். மக்கள் மகிழ்ச்சியோடு எழுச்சியோடு இருக்கிறார்கள்” எனவும் சேகர் பாபு பேசினார். மேலும் தொடர்ந்து சென்னை குடமுழுக்கு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த அவர் ” அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. நாளை மறுதினம் நாங்கள் அங்கு ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்” எனவும் பதில் அளித்துவிட்டு சென்றார்.