சென்னை மாநகராட்சியில் பெண்களுக்காக நடமாடும் ஒப்பனை அறை வாகனம் ஆனது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ் ரூ.30.28 கோடி மதிப்பீட்டில் 74 காம்பாக்டர் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதோடு, நிர்பயா திட்ட நிதியின் கீழ், ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பனை அறை வாகனத்தில் கழிவறை, முகம் பார்க்கும் கண்ணாடி, சானிட்டரி நாப்கின், உடை மாற்றும் அறை, தாய்ப்பால் ஊட்டும் அறை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த வாகனங்களின் செயல்பாட்டினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் சைதை மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் நா.கார்த்திகேயன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர், கூடுதல்/இணை/துணை ஆணையாளர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
