லாரி ஏறி பள்ளி சிறுமி பலி – கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்.!
பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை காவல் ஆணையர் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற 10 வயது சிறுமி நேற்றைய தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், காவல்துறையின் மீது விமர்சனங்களையும் எழுப்பியது.
மேலும் இந்த விபத்து, சென்னையில் கனரக வாகனங்கள் பள்ளி நேரங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், சென்னையில் விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை குறைந்தது 100 நாட்களுக்கு திருப்பி ஒப்படைக்கக் கூடாது.
காலை 7 முதல் 12 மணி வரையும், மாலை 4 முதல் 8 மணி வரையும் பள்ளிகள் உள்ள பகுதியில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ. அருண் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் பேசுகையில், ”மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் காலை நேரம் மற்றும் பள்ளியில் இருந்து திரும்பும் மாலை நேரங்களில் பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. பள்ளி தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரம் பள்ளிகளின் வாயிலில் காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும்.