மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டுக்கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தாயகம் திரும்ப முடியாமல் மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டுக்கொண்டு வர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலிருந்து வேலைவாய்ப்புக்காக மலேசியா தமிழர்கள் பலரை, அவர்கள் பணிபுரிய சென்ற நிறுவனங்கள் தகுந்த பணியும், உரிய ஊதியமும் தராது ஏமாற்றியதோடு, கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் பறித்து வைத்துக்கொண்டதால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வரும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் தங்களது சொந்த செலவில்தான் நாடு திரும்ப வேண்டும் எனக்கூறி, சிறிதும் மனச்சான்றின்றி இந்தியத்தூதாகம் முற்றுமுழுதாகக் கைவிரித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
கொரோனா தொற்றுப்பரவலினால் தற்போது இடப்பட்டுள்ள உலகளாவியக் கட்டுப்பாடுகள் காரணமாக விமானப்பயணத்திற்கான செலவுகள் நான்கு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், மலேசியாவிலுள்ள இந்தியத்தூதரகமும் நாடு திரும்ப எவ்வித உதவியும் செய்யாததால் அங்குச் சிக்கியுள்ள தமிழர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களது குடும்பத்தினரும் செய்வதறியாது கலங்கி நிற்கின்றனர். ஏற்கனவே, அவர்கள் வெளிநாட்டுப்பணிக்குச் செல்வதற்காக ஏற்பட்ட கடன் சுமையால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில், நாடு திரும்புவதற்கான செலவையும், கொரோனா பரிசோதனை செய்து தொற்றில்லா சான்றைப் பெறுவதற்கான செலவையும் அவர்களே செலுத்த வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவது சிறிதும் அறமற்ற கொடுஞ்செயலாகும்.
குடும்ப வறுமை காரணமாக வீட்டுவேலை, கட்டிட வேலை உள்ளிட்ட உடல் உழைப்புப் பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் கல்வியறிவு அதிகம் இல்லாத எளிய மக்கள், அவர்களைப் பணிக்கு எடுக்கும் முகவர்கள் மற்றும் நிறுவனங்களால் தொடர்ந்து ஏமாற்றப்படுவதும், அவ்வாறு சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்கு இந்தியத் தூதரகத்திலிருந்து எவ்வித உதவியும் வழங்கப்படாது வஞ்சிக்கப்படுவதும் பெருங்கவலையளிக்கிறது.
ஆகவே, இச்சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் தாயகத்திற்கு மீட்டுக் கொண்டுவர பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதனை விரைந்து சாத்தியப்படுத்த வேண்டுமெனவும், ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வெளிநாடுகளில் சிக்கிக்கொள்ளும் தமிழர்களின் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…