முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்! அமைச்சர் துரைமுருகன் சொன்ன தகவல்!
முதல்வர் ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவமனை நிர்வாகத்தின் தகவலின்படி, முதலமைச்சரின் உடல்நலம் தற்போது சீராக உள்ளது.
இந்த சம்பவத்தை அறிந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தனர்.முதலமைச்சரின் உடல்நலம் குறித்து தகவல் அறிந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது விரைவான குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
முதலமைச்சரின் உடல்நலம் முழுமையாக தேறியவுடன், அவர் தனது பணிகளை வழக்கம்போல தொடருவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பேசுகையில், “முதல்வர் ஸ்டாலின் நலமாக இருக்கிறார். அவர் விரைவில் வீடு திரும்புவார். அவருக்கு ஒன்றும் ஆகவில்லை அவர் மிகவும் நலமாகத்தான் இருக்கிறார். இன்று மாலை கூட அவர் வீடு திரும்ப வாய்ப்புகள் இருக்கிறது” என்று உறுதியளித்தார். அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் திருப்திகரமாக உள்ளதாகவும், அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது.