மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!
மதிமுக அலுவலகத்திற்குள் புகுந்த நபர் உருட்டு கட்டையால் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளார்.

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர் சீருடையில் வந்த மர்ம நபர் ஒருவர், மதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்து கல்வீச்சு மற்றும் உருட்டு கட்டையால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் அலுவலகத்தின் உள்ளே இருந்த மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. பின்னர், தகவல் அறிந்த வந்த போலீசார், மர்மநபரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மதிமுக கட்சி நிர்வாகம் சார்பில் இந்தத் தாக்குதல் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் நடத்தியவர் யார் என்றும், தாக்குதல் தொடர்பான காரணங்கள் அல்லது உள்நோக்கம் குறித்து உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்தச் சம்பவம் அக்கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், மதிமுக நிர்வாகிகள் இதுபோன்ற தாக்குதல்களைக் கண்டித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.