“சாரி தெரியாம நடந்திருச்சு”…இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்! காரணம் என்ன?

வரைபடத்தில் ஏற்பட்ட பிழை தற்செயலானது என இந்தியாவிடம் இஸ்ரேல் ராணுவம் (IDF) விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டுள்ளது.

narendra modi israel

இஸ்ரேல் : நேற்று (13.06.2025) அதிகாலை “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இன்று “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. இதில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் உள்ள முக்கிய இலக்குகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டன. இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 34 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்திருந்தது.

Read More- “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்”…இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்!

இப்படியான சூழலில், இஸ்ரேல் ராணுவம் (IDF) 2025 ஜூன் 13 அன்று சமூக ஊடகத்தில் ஒரு வரைபடத்தைப் பகிர்ந்தது. இந்த வரைபடம் ஈரானின் ஏவுகணைகள் எவ்வளவு தூரம் செல்லும் என்பதைக் காட்டுவதற்காக வெளியிடப்பட்டது. ஆனால், இந்த வரைபடத்தில் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசப் பகுதிகளை இந்தியாவின் பகுதிகளாகக் காட்டாமல், ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தானின் பகுதியாகவும், அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தவறாகக் காட்டியது.

இந்த வரைபடத்தைப் பார்த்த இந்திய நெட்டிசன்கள் மிகவும் கோபமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்பதை வலியுறுத்தி, இஸ்ரேல் ராணுவத்தின் இந்தத் தவறுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் இந்தப் பதிவை நீக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்தனர். இந்தியாவும் இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகள் என்பதால், இந்தத் தவறு இந்திய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதே சமயமம் காங்கிரஸ் தலைவர் பவன் கெரா மோடி நட்பு பாராட்டும் இஸ்ரேல் நாட்டின் ராணுவம், ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெளியிட்ட உலக வரைபடத்தில், ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானில் இடம்பெற்றிருக்கிறது. ‘மோடியின் மகுடத்தில் இன்னொரு வெற்றி வைரம்’ என்ற அர்த்தத்தில்  கிண்டலாகவும் பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து, எதிர்ப்புகளை கிளம்பியதை இஸ்ரேல் ராணுவம் தங்கள் தவறை உணர்ந்து, 2025 ஜூன் 14 அன்று மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது.

இஸ்ரேல் ராணுவத்தின் மன்னிப்பு அறிக்கையில், வரைபடத்தில் ஏற்பட்ட பிழை தற்செயலானது என்றும், இந்தியாவின் இறையாண்மையை மதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தவறான வரைபடத்தை உடனடியாக நீக்கியதாகவும், இந்திய மக்களிடம் ஏற்பட்ட கவலைகளுக்கு மன்னிப்பு கோருவதாகவும் IDF தெளிவுபடுத்தியது. இந்த நிகழ்வு, இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் பதற்றங்களுக்கு மத்தியில் நடந்தாலும், இந்தியாவின் எதிர்ப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்தியா-இஸ்ரேல் உறவுகள் தொடர்ந்து வலுவாக இருக்கும் நிலையில், இத்தகைய தவறுகள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்