இந்த யோசனை எனக்கு வரவில்லை..! நடராஜன் மைதான திறப்பு விழாவில் தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி.!

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த தினேஷ் கார்த்திக், கிரிக்கெட் மைதானத்தை கட்டும் யோசனை எனக்கு வரவில்லை என்று நெகிழ்ச்சியாக கூறினார்.
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தன்னுடைய சொந்த ஊரான சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை சொந்தமாக கட்டியுள்ளார். இந்த மைதானத்தின் திறப்பு விழாவிற்கு தினேஷ் கார்த்திக், விஜய் டிவி புகழ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.
மைதானத்தை திறந்து வைத்த பின் பேசிய அவர், நான் இந்த விழாவிற்கு வந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நடராஜன் திறமையால் தமிழக அளவிளான போட்டிகளில் விளையாடி, அங்கிருந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி, இன்று இந்த மைதானத்தை கட்டியுள்ளார்.
எனக்கு அவரிடம் பிடித்தது, அவர் வாழ்வில் முன்னேற உதவியாய் இருந்தவர்களை இன்று வரை மறக்காமல் அவர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறார். பல ஊர்களில் இருந்து நிறைய பேர் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். ஆனால், ஒரு மைதானத்தைக் கட்டி தனது ஊரில் இருப்பவர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்கு வர வேண்டும் என்று யோசித்தது மிகப் பெரிய விஷயம்.
அதை நடராஜன் நிஜமாக்கி காட்டியிருக்கிறார். நானும் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். ஆனால், ஒரு கிரிக்கெட் மைதானத்தை கட்டும் யோசனை எனக்கு வந்தது இல்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சியுடன் கூறினார்.