பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு.!

பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை வழங்குகிறது.
கொரோனா காரணத்தால் யுஜிசி மற்றும் கல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்துவதற்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான வாதம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, தேர்வு நடத்த வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது தாங்கள்தான் என்று யுஜிசி வாதம் வைத்து இருந்தது. மேலும், இந்திய சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா யுஜிசி சார்பில் வாதாடினார்.
அப்போது, டிகிரி கொடுப்பது யுஜிசிதான். அதற்குத்தான் தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் இருக்கிறது. மகாராஷ்டிரா, டெல்லி இந்த தேர்வுகளை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ரத்து செய்துள்ளது. அவ்வாறு ரத்து செய்வது எந்த வகையில் நியாயம் ஆகும். அதற்கு அதிகாரம் இருக்கிறதா என்று கேள்விகள் எழுப்பி இருந்தார். தேர்வை ரத்து செய்ததற்கான உரிய காரணங்களை முன் வைக்குமாறு, உச்ச நீதிமன்றமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசுகளிடம் விளக்கம் கேட்டு இருந்தன.
இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 18- ஆம் தேதி யுஜிசி தேர்வு நடத்துவது குறித்து அனைத்து தரப்பினரும் தங்களது இறுதிக்கட்ட வாக்குவாதங்களை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், அனைத்து கட்ட விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு நாளை வழங்குகிறது.