ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!
ஓசூர் அருகே நேற்று இரவு காரில் கடத்தப்பட்ட ரோகித் என்ற 8-ம் வகுப்பு மாணவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாவநட்டி கிராமத்தில் 13 வயதுடைய 8-ம் வகுப்பு பள்ளி மாணவன் ரோகித் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (ஜூலை 2, 2025) மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்ட ரோகித், தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள குந்துகோட்டை அருகே முட்புதரில் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த கொடூர சம்பவத்தில் கடத்தலுக்கு உதவியதாக 15 வயதுடைய இரண்டு சிறுவர்களிடம் அஞ்செட்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரும், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு இளைஞரும் இந்த கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சிறுவனின் உடலை வைத்து உறவினர்களும் கிராம மக்களும் அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் காவல்துறையின் செயலற்ற தன்மையைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சிறுவனின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தினார் இந்த சம்பவம் தமிழகத்தில் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.