அமித்ஷா வருகையின் போது மின் நிறுத்தம்.! அரசியல் செய்ய விரும்பவில்லை – அண்ணாமலை பேச்சு.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின் தடை ஏற்பட்டதை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என அண்ணாமலை பேட்டி.
ஒருநாள் பயணமாக நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தடைந்தார். விமானம் மூலம் இரவு 9 மணி அளவில் சென்னைக்கு வருகை தந்த அமித்ஷாவுக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான பிரபலங்கள் சந்திப்பு நடைபெற்றது. கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை சார்ந்த 25 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு நிறைவு பெற்றது.
பின்னர், அமித்ஷா சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோலா விடுதிக்கு வரும் பொழுது, மின்தடை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக அரசை குற்றம் சுமத்த முடியாது.
அடுத்த முறை இதனை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என சென்னை, கிண்டியில் அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.