தொடங்கியது கவுன்ட் டவுன்! நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன்-3!

சந்திராயன் -3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து நாளை இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான பரிசோதனை, சோதனை ஓட்டம் என அனைத்தும் நிறைவடைந்து எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன.
நாளை இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திராயன்-3 விண்வெளி ஆய்வுக்காக விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இந்தியாவை உலக அரங்கில் விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை இந்தியா ஒரு பெருமை மிகு தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.
இந்த நிலையில், சந்திராயன் -3 விண்கலம் நாளை விண்ணில் பாயவுள்ள நிலையில், இருபத்தி ஐந்தரை மணி நேர கவுன்ட்டவுன் (25.30) பகல் 1 மணிக்கு தொடங்கியுள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் விண்கலம் – 3 நாளை மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. விண்கலத்தை ஏந்தி செல்லும் ராக்கெட்டில் திட, திரவ எரிபொருள் நிரப்பப்பட உள்ளது.
நாளை விண்ணில் செலுத்தப்படும் சந்திராயன் -3 விண்கலம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், 3,900 கிலோ எடை கொண்ட சந்திராயன் – 3 விண்கலத்தில் 7 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. லேண்டர், ரோவர் உள்ளிட்டவையுடன் விண்ணில் பாயும் சந்திராயன் 3 நிலவின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும். நிலவின் தரைப்பரப்பில் மின்னூட்ட அதிர்வுகள், நிலநடுக்க அதிர்வுகள், தட்பவெப்ப நிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.