ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!
சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிக்கவோ, பரப்பவோ வேண்டாம் என இந்திய விமானப் படை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, துப்பாக்கிச் சண்டையும், ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று அறிவித்தும் இருந்தார்.
இந்த சூழலில் இந்திய விமானப்படை (IAF) தரப்பில் இருந்து ஒரு புதிய விளக்கத்தை கொடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் தற்போதைய நிலை குறித்து பொதுமக்களுக்கு தெளிவு அளிப்பதற்காகவும், தேசிய பாதுகாப்பு நோக்கங்களுடன் இணைந்து நடைபெறும் இந்த செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் வெளியிட்டுள்ளது.
இது குறித்து இந்திய விமானப்படை (IAF) தனது எக்ஸ் வளைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” இந்திய விமானப்படை (IAF) ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முக்கியமான பணிகளை மிகுந்த துல்லியத்துடனும், தொழில்முறை திறனுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இந்த செயல்பாடுகள் இந்தியாவின் தேசிய நோக்கங்களுக்கு முழுமையாக இணங்க, மிகவும் திட்டமிட்ட முறையில் மற்றும் ரகசியமாக நடத்தப்பட்டன, இதனால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய இலக்குகள் பாதுகாக்கப்பட்டன.
இன்னும் இந்த ஆபரேஷன் முடியவில்லை. தற்போது இந்த ஆபரேஷன்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், முழுமையான விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ விளக்கங்களை வழங்குவதற்கு பொருத்தமான நேரத்தில் ஒரு விரிவான அறிக்கை வெளியிடப்படும். அதுவரை, இந்திய விமானப்படை பொதுமக்கள், ஊடகங்கள் மற்றும் அனைத்து தரப்பினரையும் ஆதாரமற்ற ஊகங்களை தவிர்க்கவும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதை நிறுத்தவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இது ஆபரேஷனின் ரகசியத்தன்மையையும், தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்ய உதவும் எனவும் கூறியுள்ளது.
The Indian Air Force (IAF) has successfully executed its assigned tasks in Operation Sindoor, with precision and professionalism. Operations were conducted in a deliberate and discreet manner, aligned with National Objectives.
Since the Operations are still ongoing, a detailed…
— Indian Air Force (@IAF_MCC) May 11, 2025