Palladam : பல்லடம் படுகொலை.. தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி போலீசில் சரண்.!

Palladam Murder - 2 Person surrender

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வசித்து வந்த செந்தில்குமார் என்பவர், அருகே கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த ஞாயிற்று கிழமை சிலர் மது அருந்த வந்துள்ளனர். அதனை தடுத்து மது அருந்த கூடாது என செந்தில் குமார் கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து முதலில் அங்கிருந்து புறப்பட்ட அந்த கும்பல் அடுத்ததாக ஆயுதங்களுடன் வந்து, செந்தில்குமாரை அவரது வீட்டருகே அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளது. இதனை பார்த்த செந்தில்குமாரின் சித்தி புஷ்பவதி , தம்பி மோகன்ராஜ் மற்றும் சித்தி ரத்தினாம்மாள் ஆகியோர் செந்தில்குமாரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

ஆனால் அந்த கும்பல் செந்தில் குமார் குடும்பத்தாரையும் அரிவாள் உள்ளிட்ட கூறிய ஆயுதங்கள் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளது. இதனை அடுத்து, சம்பவ இடத்திலேயே செந்தில் குமார் மற்றும் 2 பெண்கள் உள்ளிட்ட அவரது உறவினர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி  விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை விசாரணையில், திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடேசன் முக்கிய குற்றவாளி என்றும், திருச்சியை சேர்ந்த செல்லமுத்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேனியை சேர்ந்த சோனமுத்தையா என்பவரும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய கொலையாளிகளை கைது செய்யக்கோரி  உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில்தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (எ) செல்வம் மற்றும் கோனமுத்தையா ஆகிய இருவரும் இன்று திருப்பூர் வடக்கு போலீசில் சரண் அடைந்துள்ளனர். பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்