Cauvery: காவிரி விவகாரம்! தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு செப்.21ல் விசாரணை!

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கவாய், மிஸ்ரா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை பட்டியலில் இடம்பெறாததால் தமிழ்நாடு அரசு முறையீடு செய்தது. அதாவது, காவிரி நீர் திறப்பு தொடர்பான வழக்குகளை உடனடியாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய், பி.கே.மிஸ்ரா அமர்வில் தமிழக அரசு முறையிட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு முறையீட்டை தொடர்ந்து காவிரி தொடர்பான வழக்குகள் வரும் 21ம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, நீதிபதிகள் கவாய், நரசிம்மா, மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
காவிரி வழக்கை விசாரிக்கும் 3 நீதிபதிகளில் நரசிம்மா இன்று விடுப்பில் உள்ளதால் வழக்கை இன்று விசாரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த வாரம் விடுப்பில் செல்ல உள்ளதாக நீதிபதி கவாய் தகவல் தெரிவித்தார், 3 நீதிபதிகள் அமர்வில் நீதிபதி நரசிம்மா தற்போது விடுப்பில் உள்ளார். இதனால், காவிரி நீர் திறப்பு தொடர்பான வழக்கு வரும் 21ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நேற்று அறிவிக்கப்பட்ட, நிலையில் நீதிபதிகள் விடுப்பு காரணமாக வழக்கு விசாரணை செப்.21ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடாக அரசுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.