ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!
ஆந்திராவில் வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக, அதிகபட்ச வேலை நேரத்தை ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது மாநில அரசு. தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ‘சாதகமாக’ தொழிலாளர் சட்டங்களைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு (ஐ&பிஆர்) அமைச்சர் கே பார்த்தசாரதி தெரிவித்தார்.
உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் இம்முடிவு எனக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதற்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிப்பதற்கும் ஒரு பெரிய உத்தியின் ஒரு பகுதியாக இந்த சீர்திருத்தங்கள் உள்ளன என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
இப்பொழுது இந்த புதிய சட்ட திருத்ததை விமர்சித்த சிபிஐ மாநில செயலாளர் கே. ராமகிருஷ்ணா, ‘மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கங்கள் ‘தொழிலாளர் விரோத’ கொள்கைகளைப் பின்பற்றுகின்றன’ என்றார்.
மேலும், இந்த முடிவுக்கு எதிர்க்கும் வகையில், ஜூலை 9 ஆம் தேதி இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இந்த போராட்டத்தில் அனைத்துப் பிரிவுகளும் தீவிரமாகப் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.