Chandrababu Naidu Arrest : பரபரக்கும் ஆந்திரா..! முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய சிறையில் அடைப்பு.!

ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சி காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்க விவகாரத்தில் பல கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அவர் மீது ஆந்திர மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
மேலும் அவர் மீது 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
முன்னாள் முதல்வரும் தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் சந்திரபாபு நாயுடு கைது ஆந்திர மாநிலத்தையே அதிர வைத்தது. பல்வேறு இடங்களில் தற்போதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இருந்தும் காவல்துறையினர் தங்கள் கைது நடவடிக்கையில் உறுதியாக இருந்தனர்.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட பின்னர், அதிகாரிகள் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். நேற்று அதிகாலை 3 மணி வரை சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் பிறகு நேற்று இரவு அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவர் மீதான வழக்கு , முகாந்திரம் ஆகியவற்றை விசாரித்த நீதிபதி சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி வருகிற 22ஆம் தேதி வரை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீதிமன்ற காவலில் விசாரணை காவலில் இருக்க உள்ளார்.
நேற்று இரவு அவர் ராஜமுந்திரி மத்திய சிறைக்கு அழைத்து செல்ல பட்டார். முன்னாள் முதல்வரின் கைது நடவடிக்கையால் ஆந்திர மாநிலத்தில் தற்போது பதற்றமான சூழல் ஏற்படுகிறது. ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பல்வேறு பகுதி பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்களும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.