Indira En Selvam : டூப் போடாமலே நடித்த எம். ஆர். ராதா! ‘இந்திரா என் செல்வம்’ படம் உருவான கதை!

இயக்குனர் சி. பத்மநாபன் இயக்கத்தில் கடந்த 1962-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “இந்திரா என் செல்வம்”. இந்த திரைப்படத்தில் எம். ஆர். ராதா, எஸ். ஏ. அசோகன், ஏ. கருணாநிதி, நாகேஷ், பி. சி. கிட்டன், டி. கே. சம்பங்கி, ஏ. பி. எஸ். மணி, பண்டரிபாய், ஜெமினி சந்திரா, புஷ்பமாலா , பேபி சுமங்களா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அந்த சமயமே பெரிய வரவேற்பை பெற்றது.
அந்த சமயம் வெளியான படங்கள் அனைத்தும் ஒரு படத்தில் வில்லன் இருப்பார் அந்த வில்லனை ஹீரோ தீர்த்துக்கட்டுவார் என்பது போல கதையம்சம் கொண்ட படங்கள் தான் வெளியானது. இந்த மாதிரி சமயத்தில் புதிய கதையம்சம் கொண்ட ஒரு படமாக “இந்திரா என் செல்வம்” திரைப்படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
படத்தின் கதைப்படி, இந்திரா (பேபி சுமங்களா) பிறந்த உடன் தன்னுடைய தாயை இழந்து விடுகிறார். பின் இந்திரா அம்மாவிற்கு பிரசவம் பார்த்த சுசிலா (பண்டரிபாய்) இந்திராவைத் தன் குழந்தையாக தத்தெடுத்து வளர்க்க ஆசைப்படுகிறார். பிறகு, மருத்துவர் கருணாமூர்த்தியால் (எம். ஆர். ராதா) பாதிக்கப்படும் சுசிலா வேறு ஊருக்குச் செல்கிறாள். அங்கு சென்று அங்கிருக்கும் மருத்துவமனையில் வேலைக்குச் சேர்கிறாள்.இந்திராவை அங்குள்ள பள்ளியில் சேர்த்து விடுதியில் தங்க வைக்கிறாள்.
தாய் இல்லாமல் வேதனையுடன் அனாதை போல விடுதியில் தங்கி இருக்கும் இந்திராவிற்குத் தன் தந்தை யாரென்று தெரியாது. தாய் இறந்தாலும் தன்னுடைய தந்தை யார் என்ற எண்ணம் இந்திராவின் மனதிற்குள் கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தது. பிறகு இந்திரா தன்னுடைய மனதிலுள்ளவற்றை ஒரு கடிதமாக எழுதி கடவுளுக்கு அனுப்புகிறாள். ஆச்சர்யப்படும் விதமாக அவளுக்கு பொம்மை ஒன்று பரிசாகக் கிடைக்கிறது. அதை தன் நண்பர்களிடம் காட்டி மகிழ்கிறாள்.
கருணாமூர்த்தி, சுசிலா பணிபுரியும் இடத்தைக் கண்டறிந்து அவளுக்கு இடையூறு செய்கிறான். சுசிலா தன் காதலரான மருத்துவர் சேகர் (எஸ். ஏ. அசோகன்) உதவியால் அவனிடமிருந்து தப்பிக்கிறாள். சேகர்-சுசிலா இருவரும் திருமணம் செய்கிறார்கள். இந்திராவைத் தங்கள் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறார்கள். இதை வைத்து தான் படத்தை இயக்குனர் சி. பத்மநாபன் எடுத்திருப்பார்.
படத்தில் அனைவருடைய நடிப்பும் ஒரு பக்கம் வைத்து கொண்டால் அவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிடும் விதமாக எம்.ஆர்.ராதா நடிப்பில் மிரட்டி இருப்பார். அந்த அளவிற்கு வில்லத்தனம் கலந்த ஒரு ஹீரோவாகவே படத்தில் வாழ்ந்து இருப்பார் என்றே கூறலாம். படத்தில் அவரை பார்க்கும் போது அந்த அளவிற்கு நிஜமான வில்லன் போலவே இருப்பார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக சில சண்டைகாட்சிகளில் எம்.ஆர்.ராதா டூப் போடாமலே நடித்திருப்பார். இதனை அந்த படத்தில் பணியாற்றிய பல பிரபலங்களும் அந்த சமயமே கூறியது உண்டு. அவர் எந்த அளவிற்கு படத்தில் தன்னுடைய கடின உழைப்பை கொடுத்தாரோ அதே அளவிற்கு படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
படத்தை போல படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் இன்பம் கொண்டாடும், கன்னிப் பருவம் அவள், உள்ளிட்ட பாடல்கள் எல்லாம் படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய ஹிட் ஆகிவிட்டது . பிறகு படத்துடன் அந்த பாடல்களை சேர்த்து பார்த்தவுடன் மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த அளவிற்கு நல்ல பாடல்களை இசையமைப்பாளர் சி. என். பாண்டுரங்கன், கச். ஆர். பத்மநாப சாஸ்திரி இருவரும் இணைந்து இசையமைத்து கொடுத்திருந்தார்கள்.
1962-ஆம் ஆண்டு செப்டம்பர் 13 -ஆம் தேதி இந்த “இந்திரா என் செல்வம்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படம் வெளியாகி இன்றுடன் 63-ஆண்டுகள் ஆகிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில், இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவர்க்கும் இந்த படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.