ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? – நடந்தது என்ன? விமானப்படை பதில்.!
ஆபரேஷன் சிந்தூரில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறியுள்ளார்.

டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.
அப்போது, எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதியிடம் கேட்டபோது, ”தாக்குதல் நடத்த பாகிஸ்தான இந்திய ராணுவ நிலைகளை குறி வைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது, அதை வானிலேயே முறியடித்தோம் பின்னர் அதற்கு பதிலடியாக நாம் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மற்றும் அதன் விமானப்படை தளங்களை நமது ஏவுகணையால் அடித்தோம்.
பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்திய இந்திய விமான படை வீரர்கள் பத்திரமாக நாடு திரும்பியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறிய தகவலுக்கு இந்திய விமானப்படை மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஏ.கே.பார்தி ,” நாம் இன்னும் போர் சூழ்நிலையில் இருப்பதால், நாம் இழந்தது குறித்து நான் ஏதாவது கருத்து தெரிவித்தால், அது எதிரிக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். நாங்கள் இங்கே ஊகிக்க விரும்பவில்லை, என்னிடம் புள்ளிவிவரங்கள் உள்ளன.
அதை உறுதிப்படுத்த தொழில்நுட்ப விவரங்கள் தற்போது எங்களிடம் உள்ளன என்றும் கூறிய அவர். இந்தக் காரணத்திற்காக, உடனடியாக எந்த புள்ளிவிவரங்களையும் வழங்க இது சரியான நேரம் அல்ல என்றார். தொடர்ந்து பேசிய அவர், பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைப்பது மட்டுமே இந்திய ராணுவத்தின் நோக்கம் என்றும், பாகிஸ்தானில் நான்கு இடங்களையும், பாகிஸ்தான் காஷ்மீரில் ஐந்து இடங்களையும் குறிவைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்த இராணுவ நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், இதில் கந்தஹார் விமானக் கடத்தல் மற்றும் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட யூசுப் அசார், அப்துல் மாலிக் மற்றும் முதாசிர் அகமது போன்ற பயங்கரவாதிகள் அடங்குவர். 9 முகாம்கள் தேடி அழிக்கப்பட்டதாகவும், அதில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் இருந்ததாகவும் உறுதிபடுத்தியுள்ளார். இவ்வாறு பயங்கரவாதிகளின் கட்டமைப்பை தகர்க்கவே இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.