பெங்களூர் கூட்ட நெரிசல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம்!
ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை உயர்த்தி முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

பெங்களூர் : ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியடைய செய்தது. சம்பவம் நடந்து நாட்கள் கடந்து கொண்டு இருக்கும் நிலையில் இன்னும் தீராத சோகமாக இருந்து வருகிறது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருளாதார ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த முடிவு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தொகை பற்றாது இன்னும் உயர்த்தி வழங்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்தது.
எனவே, முதலமைச்சர் சித்தராமையா இந்தத் தொகையை உயர்த்தி 25 லட்சம் ரூபாயாக அறிவித்துள்ளார். இந்த உயர்வு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மேலும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை KSCA நிர்வாகிகள் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அமமாநில காவல்துறைக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இப்படியான சூழலில், இந்த சம்பவத்தை அடுத்து, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெய்ராம் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தார்மீக பொறுப்பை ஏற்று, இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக அவர்கள் கூட்டாக அறிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.