இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!
சென்னையில் விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகனங்களை குறைந்தது 100 நாட்கள் வரை திருப்பி ஒப்படைக்க கூடாது எனவும் உத்தரவு போடப்பட்டுள்ளது.

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த 10 வயது பள்ளி மாணவி சௌமியா உயிரிழந்த சம்பவம் இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. சௌமியாவை அவரது தாயார் யாமினி இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, பள்ளி அருகே பொதுப்பாதையில் வந்த கனரக லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் சௌமியா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே சமயம் யாமினி காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயர சம்பவத்தை அடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உடனடியாக கனரக வாகனங்களுக்கு கடுமையான நேரக் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டார். அதன்படி, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கனரக வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் வாகனங்கள் மற்றும் இதற்கு அனுமதி அளிக்கும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்ததுடன் , விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகனங்களை குறைந்தது 100 நாட்கள் வரை திருப்பி ஒப்படைக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் லாரி இயக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று, கொளத்தூர் பகுதி போக்குவரத்து உதவி ஆணையர் சத்தியமூர்த்திக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1976-இன் கீழ் 17(அ) பிரிவின்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது கொளத்தூர் காவல்நிலையத்தில் பாரதிய நியம சட்டம் (BNS) பிரிவு 105 (கொலைக்கு ஒப்பான கவனக்குறைவு) மற்றும் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல்துறை, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பள்ளி வளாகங்கள் அருகே கூடுதல் காவலர்களை நிறுத்தவும், CCTV கண்காணிப்பை விரிவாக்கவும் முடிவு செய்துள்ளது.