ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

ஈரான் கொடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களில் 40,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளனர்.

AMERICA

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம் குறையாமல் இருக்கிறது. இந்த போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலை ஆதரிக்க அமெரிக்கா நேரடியாக களமிறங்குமா? என்ற கேள்வி உலக அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முழு ஆதரவு அளிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்தாலும், அமெரிக்காவின் இராணுவ நகர்வுகள் மற்றும் டிரம்பின் அறிக்கைகள்  பார்க்கும்போது அவரும் போரில் இறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், ஜூன் 18, 2025 அன்று வெள்ளை மாளிகையில் நடந்த தேசிய பாதுகாப்பு கூட்டத்தில், ஈரானின் ஃபோர்டோ அணு ஆயுத மையத்தை 30,000 பவுண்டு ‘பங்கர்-பஸ்டர்’ குண்டுகளை பயன்படுத்தி தாக்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது  டிரம்ப், “நான் இதை செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம். யாருக்கும் என் முடிவு தெரியாது,” என்று செய்தியாளர்களிடம் கூறினார், இது அவரது முடிவு இன்னும் உறுதியாகவில்லை என்பதை எடுத்துக்காட்டியது.

அமெரிக்கா இதுவரை நேரடி தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்றாலும், இஸ்ரேலுக்கு பாதுகாப்பு ஆதரவு அளித்து வருகிறது என்பது தெரிந்த ஒரு விஷயம் தான்.  இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய ஏவுகணைகளை தடுக்க அமெரிக்க இராணுவம் உதவியது. அப்படி இருந்தாலும் கூட எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவே தெரிவித்து வந்த நிலையில், நேற்று ஈரானை “முழு சரணடைய” வலியுறுத்திய அவர், “ஈரானுக்கு அணு ஆயுதம் இருக்கக்கூடாது. என்று எச்சரித்திருந்தார். அதற்கு பதிலடியாக ஈரான் எப்போதும் சரணடையாது எனவும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் சரிசெய்ய முடியாத பெரும் சேதத்தை சந்திக்கும் என்றும் அறிவித்திருந்தது.

இதனையடுத்து, இன்று காலை முதல் டிரம்ப் நேரடியாக இந்த போரில் இறங்க முடிவு செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல்கள் பரவி கொண்டு இருக்கிறது. இப்படியான வேலையில் ஈரானின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களில் 40,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளனர்.

மேலும், அமெரிக்கா USS நிமிட்ஸ் விமானம் தாங்கி கப்பலை மத்திய கிழக்குக்கு அனுப்பியுள்ளது. அது மட்டுமின்றி,  30-க்கும் மேற்பட்ட விமான எரிபொருள் நிரப்பு விமானங்களை ஐரோப்பாவுக்கு அனுப்பியுள்ளது. எனவே, இஸ்ரேலுக்கு அரணாக களமிறங்குகிறதா? அல்லது நேரடியாக அமெரிக்கா இந்த போரில் இறங்க போகிறதா? என்கிற கேள்விகளையும் எழுப்பியுள்ளது. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்