மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!
வேறு மாநில அணிக்காக விளையாட விரும்புவதால், பிருத்வி ஷா மும்பையிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் (MCA) ‘நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட்’ (NOC) எனப்படும் அனுமதி கடிதம் கோரியுள்ளார். இந்த அனுமதி கிடைத்தால், அவர் மும்பை அணியை விட்டு வேறு மாநில அணியில் ‘தொழில்முறை’ வீரராக விளையாட முடியும். இந்த முடிவு, அவரது கிரிக்கெட் திறமையை மீண்டும் நிரூபிக்கவும், இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கவும் உதவும் என்று அவர் நம்புகிறார். மும்பை கிரிக்கெட் சங்கம், “பிரித்வி எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதைப் பரிசீலித்து விரைவில் முடிவு எடுப்போம்,” என்றும் உறுதியளித்துள்ளது.
ஏன் இந்த முடிவு?
பிரித்வி ஷா கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி, முதல் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் கவர்ந்தவர். ஆனால், பின்னர் உடற்தகுதி பிரச்சினைகள், ஒழுக்கமின்மை குற்றச்சாட்டுகள், மற்றும் களத்துக்கு வெளியே நடந்த சர்ச்சைகள் காரணமாக அவரது வாழ்க்கை சறுக்கியது. அவரது உடலில் 35% கொழுப்பு இருப்பதாகவும், உடற்பயிற்சியில் போதுமான முன்னேற்றம் இல்லை என்றும் மும்பை அணி நிர்வாகம் கூறியது. MCA, இரண்டு வார உடற்பயிற்சி திட்டத்தை அவருக்கு வழங்கி, உடற்தகுதியை மேம்படுத்துமாறு கூறியிருந்தது, ஆனால் பிரித்வி அதை பூர்த்தி செய்யவில்லை. எனவே, கடந்த ஆண்டு, மும்பை அணி அவரை ரஞ்சி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் இருந்து நீக்கியது.
என்ஓசி என்றால் என்ன?
நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட் (NOC) என்பது, ஒரு வீரர் தனது மாநில அணியை விட்டு வேறு மாநில அணிக்கு மாறுவதற்கு தேவையான அனுமதி கடிதம். இதை மும்பை கிரிக்கெட் சங்கம் வழங்கினால், பிரித்வி வேறு மாநில அணியில் (உதாரணமாக, மகாராஷ்டிரா அல்லது வேறு மாநிலம்) விளையாட முடியும். ‘தொழில்முறை’ வீரர் என்றால், அவர் அந்த மாநிலத்தின் உள்ளூர் வீரராக இல்லாமல், ஒரு வெளி மாநில வீரராக அணியில் இணைவார். இதற்கு முன்பு, ரோபின் உத்தப்பா, ஷிகர் தவான் போன்ற வீரர்களும் இதேபோல் மாநிலங்களை மாறியுள்ளனர்.
பிரித்வியின் தற்போதைய நிலை
பிரித்வி ஷாவுக்கு இப்போது 25 வயது. அவர் 5 டெஸ்ட் போட்டிகளில் 339 ரன்களும், 6 ஒருநாள் போட்டிகளில் 189 ரன்களும் எடுத்துள்ளார். ஆனால், 2021-க்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஐபிஎல் 2025 ஏலத்திலும் எந்த அணியும் அவரை தேர்வு செய்யவில்லை, இது அவருக்கு பெரிய பின்னடைவாக இருந்தது. தற்போது, மூன்று முதல் நான்கு மாநில அணிகள் அவரை அணுகியுள்ளதாகவும், குறிப்பாக மகாராஷ்டிரா அணிக்கு அவர் மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் பிரித்வி ஷாவின் இந்த முடிவு, அவரது திறமையை மீண்டும் காட்டுவதற்கு ஒரு புதிய வாய்ப்பாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள்.