ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!
83 - 84% ஸ்லிப் கேட்ச்களை பிடிக்கும் ரோகித் - கோலி இப்போது அணியில் இல்லை இது மிகவும் இந்தியாவுக்கு சவாலாக இருக்கு என இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்லிப் பீல்டிங் திறன் குறித்து இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கவலை தெரிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள், குறிப்பாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்லிப் பகுதியில் கேட்ச்களை தவறவிட்டதை பிராட் விமர்சித்தார்.
“இங்கிலாந்து மைதானங்களில் கேட்ச்களை தவறவிட்டால், இந்தியாவால் ஒரு போட்டியிலும் வெல்ல முடியாது,” என்று அவர் கூறினார். அதே சமயம், ஜஸ்பிரித் பும்ரா போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர் அணியில் இருந்தாலும், எதிரணி 300 ரன்களுக்கு மேல் குவித்தால் அது இந்தியாவுக்கு பாதகமாக அமையும் என்று பிராட் எச்சரித்தார். டெஸ்ட் போட்டியை பொறுத்தவரையில் நீங்கள் 10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய நிலையில், 3 முதல் 4 கேட்ச் வாய்ப்புகளை தவறவிடுவது நியாயமற்றது.
இந்த தொடரில் இன்னும் சில போட்டிகள் இருக்கிறது. எனவே, இந்த தொடரில் எந்த அளவுக்கு இந்தியா சிறப்பாக பீல்டிங் செய்யப்போகிறது என்பதை பார்க்க நான் மிகவும் ஆவலுடன் காத்துள்ளேன். இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் தற்போது அணியில் இல்லாத நிலையில், ஸ்லிப் பகுதியில் 83-84% கேட்ச்களை பிடிக்கும் திறன் கொண்ட இவர்களின் இடத்தை நிரப்புவது சவாலாக இருக்கும் என்றும் பிராட் குறிப்பிட்டு பேசினார்.
ஸ்லிப் பீல்டிங் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இங்கு தவறவிடப்படும் ஒரு கேட்ச் கூட ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும். இந்த தொடரில் இந்திய வீரர்கள் இந்த பலவீனத்தை சரிசெய்ய முடியுமா என்பதை காண ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர். பிராட்டின் இந்த விமர்சனம், இந்திய அணியின் பீல்டிங் திறனை மேம்படுத்துவதற்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அதே சமயம் ரோஹித் மற்றும் கோலி இல்லாத நிலையில், இளம் வீரர்கள் மீது பொறுப்பு அதிகரித்துள்ளது.