உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!
ஈரானின் உச்ச தலைவர் ரஷ்யாவை நோக்கி உதவி கோரி எழுதிய கடிதத்தில் உதவிகளின் விவரங்கள் என்ன என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கும் சூழலில், தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றமான சூழலில், நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் தரப்பு எச்சரித்திருந்தது.
எனவே, அங்கு பதற்றம் உச்சத்திற்கு சென்றிருக்கும் சூழலில், ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான மோதல்களுக்கு மத்தியில் ரஷ்யாவின் உதவியை கோரியுள்ளார். இந்த கடிதத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஜூன் 23, 2025 அன்று மாஸ்கோவில் புட்டினிடம் நேரடியாக வழங்கினார்.
இந்த கடிதம், அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானுக்கு ஆதரவு தேவைப்படுவதை வலியுறுத்துவதாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான மூலோபாய கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்கான விவாதங்களை உள்ளடக்கியதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. ஈரானின் அணு ஆயுத தளங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கியதை அடுத்து, இந்த கடிதம் முக்கியமானதாக கருதப்படுகிறது.
அந்த கடிதத்தில், ஈரான் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவின் இராணுவ மற்றும் மூலோபாய ஆதரவு கோரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” தாக்குதல்கள், ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான், மற்றும் நடன்ஸ் அணு ஆயுத தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டன, இது ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது, இதனால் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ஈரானின் உச்ச தலைவர் ரஷ்யாவை நோக்கி உதவி கோரியுள்ளார், ஆனால் கடிதத்தில் குறிப்பிட்ட உதவிகளின் விவரங்கள் என்ன என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.
ஈரான் கேட்டுள்ள உதவி கடிதத்தை பார்த்த ரஷ்யா நாங்கள் உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என உறுதியளித்துள்ளது. அந்த கடிதம் குறித்து ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசுகையில் ஈரானின் தேவைகளுக்கு ஏற்ப உதவி வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாக தெரிவித்தார். ரஷ்யாவும் ஈரானும் நீண்டகால மூலோபாய கூட்டாளிகளாக இருந்து வருகின்றன, குறிப்பாக ஈரான் ரஷ்யாவிற்கு உக்ரைன் போரில் ஆயுதங்களை வழங்கியது மற்றும் இரு நாடுகளும் ஜனவரியில் 20-ஆண்டு கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் பரஸ்பர பாதுகாப்பு உறுதி இல்லை, எனவே ரஷ்யா நேரடி இராணுவ உதவியை வழங்குவதற்கு தயங்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதே சமயம், ரஷ்ய அதிபர் புடின், இஸ்ரேல்-ஈரான் மோதலில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாகவும், ஈரானின் அமைதியான அணு ஆற்றல் திட்டத்தை ஆதரிக்கவும், இஸ்ரேலின் பாதுகாப்பு கவலைகளை தணிக்கவும் ஒரு தீர்வு காண முடியும் என்று கூறியுள்ளார்.
அவர், ஈரானின் புஷேர் அணு மின் நிலையத்தில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட ரஷ்ய பணியாளர்களின் பாதுகாப்பை இஸ்ரேல் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், புட்டினின் மத்தியஸ்த முயற்சியை நிராகரித்து, ரஷ்யா முதலில் உக்ரைன் மோதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.