”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!
கூமாபட்டி தகவல்கள் ரீல்ஸ்க்காக மட்டுமே, எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம் விருதுநகர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெயசீலன் எக்ஸ் தளப் பதிவிட்டுள்ளார்.

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ‘கூமாபட்டி’ கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. ‘இந்த பக்கம் பார்த்தா அமேசான் காடு மாதிரி இருக்கும் அந்த பக்கம் பார்த்தா அந்தமான் மாதிரி இருக்கும்’ என இளைஞர் ஒருவர் ரீல்ஸ் பதிவிட்ட நிலையில், பலரும் கூகுள் மேப்பில் கூமாபட்டியை தேடி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பலரும் அந்த இடத்திற்கு வந்து திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்ஸ்டாகிராம் மூலம் டிரெண்டாவதால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற வேண்டாம் என பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், விருதுநகர் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன், வைரல் வீடியோவில் சொன்னதுபோல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, காதல் செட்டாவதற்கு தைலமாகவோ கூமாபட்டியில் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அதோடு, தலைவனின் மற்ற தகவல்கள் ‘ரீல்’ஸ்க்காக மட்டுமே என்றும் அவர் தனது தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது பதிவில், ”நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள்!
எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்..
அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொ ன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் ‘ரீல்’ஸ்காக மட்டுமே.., கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100% கியாரண்டி உள்ள இடம். எதிர்காலத்தில் இது கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்” என்று குற்றிப்பிட்டுள்ளார்.