இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!
கிரிக்கெட்டில் பந்துவீச்சில் தாமதத்தைத் தவிர்க்க வெள்ளைப் பந்து தொடர்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பௌலிங் அணிக்கான நேரக் கட்டுப்பாடு, தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகியுள்ளது.

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிகள் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தை வேகமாகவும், மிகவும் நியாயமாகவும் நடத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, அது என்னென்ன விதிகள் என்றால், ஓவர் தாமதத்திற்கு தண்டனை (Stop Clock Rule), பந்தில் எச்சில் தடவுவது கூடாது என உள்ளிட்ட பல புதிய விதிமுறைகளை கொண்டு வந்திருக்கிறது.
பந்தில் எச்சில் தடவுவது
பந்தில் எச்சில் தடவுவது ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இப்போது எச்சில் தடவியது கண்டறியப்பட்டாலும், உடனே பந்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இது, பவுலிங் அணிகள் பந்தை மாற்றுவதற்காக வேண்டுமென்றே எச்சில் தடவுவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட விதி. பந்து மிகவும் ஈரமாகவோ அல்லது பளபளப்பாகவோ இருந்தால் மட்டும் நடுவர்கள் முடிவு செய்து பந்தை மாற்றலாம், இல்லையெனில் 5 ரன்கள் பேட்டிங் அணிக்கு வழங்கப்படும்.
கிரீஸை தொடாமல் ரன்
பேட்டர் ரன் ஓடும்போது கிரீஸை (கோடு) தொடாமல் சென்றால், அந்த ரன்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. பேட்டர்கள் திரும்பவும் தங்கள் இடத்திற்கு செல்ல வேண்டும், மேலும் பவுலிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். அடுத்த பந்தை எந்த பேட்டர் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பவுலிங் அணியின் கேப்டன் முடிவு செய்யலாம்.
DRS முறையீடு
ஒரே நேரத்தில் பேட்டர் மற்றும் பவுலிங் கேப்டன் DRS கேட்டால் (எ.கா., LBW, வைட், அவுட்), முதலில் யார் கேட்டார்களோ அவர்களின் முறையீடு முதலில் பரிசீலிக்கப்படும்.
விக்கெட் கீப்பர் கேட்ச்
விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததாக நடுவர் அவுட் கொடுத்து, பேட்டர் DRS கேட்டால், பந்து பேட்டில் படாமல் பேடில் பட்டு LBW ஆக இருக்கலாம். முன்பு, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் “அம்பயர்ஸ் கால்” வந்தால் பேட்டர் நாட் அவுட் ஆக கருதப்பட்டார். ஆனால், இப்போது புதிய விதிப்படி, ஆரம்பத்தில் அவுட் கொடுக்கப்பட்டிருந்தால், “அம்பயர்ஸ் கால்” ஆனாலும் பேட்டர் அவுட் ஆகவே கருதப்படுவார்.
நோ-பால் கேட்ச்
நோ-பால் பந்தை பேட்டர் அடித்து, அது கேட்ச் ஆனால், அது சரியான கேட்ச் என்றால் பேட்டிங் அணிக்கு ஒரு ரன் (நோ-பால் ரன்) மட்டுமே கிடைக்கும். ஆனால், கேட்ச் சரியாக பிடிக்கப்படவில்லை என்றால், பேட்டர்கள் ஓடி எடுத்த ரன்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஓவர் தாமதத்திற்கு தண்டனை (Stop Clock Rule):
டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவர் முடிந்த பிறகு 60 வினாடிகளுக்குள் அடுத்த ஓவரை தொடங்க வேண்டும். இல்லையெனில், பவுலிங் அணிக்கு முதல் இரண்டு முறை எச்சரிக்கை விடப்படும். மூன்றாவது முறை தாமதித்தால், பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்படும். இந்த விதி ஒவ்வொரு 80 ஓவர்களுக்குப் பிறகு மீண்டும் புதிதாக கணக்கிடப்படும். இது ஆட்டத்தை தாமதமின்றி நடத்த உதவும் என்பதால் இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.