விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!
தண்ணீர் வீணாவதை தடுக்க புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறோம் என்று மத்திய ஜல்சக்திக் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் தெரிவித்துள்ளார்.

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர் வீணாவதையும், தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டில் இது குறித்து கூறுகையில், “தண்ணீர் வீணாவதைத் தடுக்க புதிய திட்டத்தை கொண்டு வருகிறோம். இதன்மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நீரைப் பெறுவார்கள். பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு வரி விதிக்கப்படும்” என்றார்.
இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. பாசன நீருக்கு விதிக்கப்படும் வரியின் அளவை மாநில அரசுகளே முடிவு செய்யும். ஒன்றிய அரசு இதற்காக ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு போதிய நீரை உறுதி செய்வதுடன், நீர் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், அதே சமயம், இந்த முடிவு விவசாயிகள் மத்தியில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை நீர் மேலாண்மைக்கு உதவும் முயற்சியாக வரவேற்க, மற்றவர்கள் விவசாயத்திற்கு கூடுதல் செலவு சுமையாக அமையும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இந்த வரி சவாலாக இருக்கலாம் என்று விவசாய அமைப்புகள் எச்சரிக்கின்றன. இந்தத் திட்டத்தின் விவரங்கள் மற்றும் செயல்படுத்தல் முறைகள் குறித்து மாநில அரசுகளுடனான ஆலோசனைகளுக்கு பிறகு இன்னும் தெளிவாக தெரியவரும். இது விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதற்கு உதவுமா? அல்லது கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்துமா? என்பது வரவிருக்கும் மாதங்களில் தான் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.