யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக அவரிடம் விசாரணை செய்ய காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. பிறகு சென்னையில் வைத்து அவரிடம் காவல்துறை இது தொடர்பாக விசாரணையையும் நடத்தியது.
மேலும், விசாரணையின் போது, கிருஷ்ணா அளித்த வாக்குமூலத்தில், தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று மறுத்து அதற்கான காரணங்களையும் தெரிவித்திருந்தார். இருந்தாலும், ருஷ்ணா வீட்டில் 2 மணி நேரம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020ம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு விசாரணை நடத்துகையில், நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சிலரிடம் “Code word”-ல் தகவல்கள் பரிமாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது.
பிறகு நடிகர் கிருஷ்ணாவின் மருத்துவப் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகவில்லை என்றாலும், ஜூலை 10-ஆம் தேதி வரை காவல்நிலையத்தில் அவரை வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்ட மற்றவர்களுடன் (நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கெவின் உள்ளிட்டோர்) கிருஷ்ணாவின் தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்கள், வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவை விசாரணையில் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டன.
கிருஷ்ணா, போதைப்பொருள் விநியோகம் செய்த கெவினுடன் தொடர்பில் இருந்ததாகவும், வாட்ஸ்அப் குழுக்களில் போதைப்பொருள் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்ததாகவும் காவல்துறை கூறியது எனவே, விசாரணை முழுவதுமாக முடிந்த பிறகு தான் அவர் விடுவிக்கப்படுவார். இதனையடுத்து அவர் தனக்கு ஜாமீன் வேண்டும் என போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை. போதைப்பொருளை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் மருத்துவ அறிக்கையில் இல்லை. இதில் தொடர்புடைய நபர்களுடன் எனக்கு எந்த பழக்கமும் இல்லை எனவும் கூறி ஜாமீன் கேட்டுள்ளார்.