சென்னை : தமிழக சட்டப்பேரவையில் அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில், தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், "விவசாயிகள் நெல் மற்றும் கரும்பை விளைவித்து விற்பனை செய்வதற்காக உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணிக்கின்றனர். அரசின் நிதிநிலைமை சரியாக இல்லையென்றாலும், நாங்கள் எப்போதும் விவசாயிகளுடன் உறுதுணையாக நிற்க விரும்புகிறோம். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க உள்ளோம்"என்று தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் பருவம் தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல் மற்றும் கரும்புக்கான புதிய ஊக்கத்தொகை விவரங்கள்

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நெல் மற்றும் கரும்புக்கான கொள்முதல் ஊக்கத்தொகையை அதிரடியாக உயர்த்தி முதல்வர் அறிவித்துள்ளார்.

சன்ன ரக நெல்: குவிண்டாலுக்குக் கூடுதலாக ரூ.289 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு, இதன் மூலம் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு மொத்தம் ரூ.2,850 வழங்கப்படும்.

பொது ரக நெல்: பொது ரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு மொத்தம் ரூ.2,600 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

கரும்புக்கான விலை: கரும்புக்கு டன் ஒன்றுக்குக் கூடுதலாக ரூ.709.50 ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு, இதன் மூலம் கரும்புக்கு டன்னுக்கு மொத்தம் ரூ.4,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படவுள்ளது. வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு, தமிழக விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.