ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!
திருக்கோவிலுக்கு நடிகை திரிஷா மற்றும் தனியார் அமைப்பு இணைந்து வழங்கிய பிரம்மாண்ட கஜா என்ற இயந்திர யானை வழங்கினார்கள்.

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ அஷ்டபுஜ ஆதிசேஷ வாராஹி அம்மன் திருக்கோயிலுக்கு, நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் “பீப்பிள்ஸ் ஃபார் கேட்டில் இன் இந்தியா” (People for Cattle in India – PFCI) என்ற தனியார் அமைப்பு இணைந்து, ‘கஜா’ என்ற பிரம்மாண்ட இயந்திர யானையை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
இந்த இயந்திர யானை, சுமார் 3 மீட்டர் உயரமும், 800 கிலோ எடையும் கொண்டது, மேலும் ரூ.6 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘கஜா’ இயந்திர யானை, சக்கரங்கள் மூலம் வீதி உலா செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தண்ணீரை பக்தர்கள் மீது பீச்சி அடிக்கும் திறனுடன், காதுகள், துதிக்கை, மற்றும் தலை ஆகியவை அசையும் வகையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா ஜூன் 27, 2025 அன்று கோயிலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இந்த இயந்திர யானையை வியப்புடன் பார்த்து ரசித்தனர்.
இந்த முயற்சி, விலங்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கோயில் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. நடிகை த்ரிஷா, விலங்கு நல ஆர்வலராக அறியப்பட்டவர். இந்த இயந்திர யானையை அன்பளிப்பாக வழங்கியதன் மூலம், கோயில் விழாக்களில் உயிருள்ள யானைகளுக்கு ஏற்படும் அழுத்தத்தையும், துன்பத்தையும் தவிர்க்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
PFCI அமைப்புடன் இணைந்து, இந்த முயற்சியை மேற்கொண்டது, தமிழ்நாட்டில் மற்ற கோயில்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும் என்று பாராட்டப்பட்டுள்ளது. இந்த இயந்திர யானை, கோயில் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், நவீன தொழில்நுட்பத்தை இணைப்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பலரும் த்ரிஷாவின் இந்த முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.