ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!
திருமணமான பெண்கள் தங்கள் மாமனார், மாமியாரை மதிக்க வேண்டும் என பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரான சௌமியா தெரிவித்துள்ளார்.

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறித்து ஜூன் 27, 2025 அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அவர், சௌமியா தேர்தலில் நிற்பதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்திருந்ததாகவும், தனது குடும்பத்தில் உள்ள பெண்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்ற தனது நிலைப்பாட்டை மீறி இது நடந்ததாகவும் கூறினார்.
இது குறித்து பேசிய அவர் “அன்புமணியும் சௌமியாவும் என்னிடம் கெஞ்சி தர்மபுரியில் போட்டியிட அனுமதி பெற்றனர், ஆனால் இது எனக்கு உடன்பாடு இல்லை,” என்று தெரிவித்து, கட்சியில் வாரிசு அரசியல் இல்லை என்று வலியுறுத்தினார். ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியின் நிர்வாகத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பாமகவில் தலைமைப் பதவி தொடர்பாக ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே நீடித்து வரும் கருத்து வேறுபாடு, இந்த விமர்சனங்களுக்கு பின்னணியாக அமைந்துள்ளது. இதனால், கட்சியின் உட்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்து, தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் ராமதாஸ், தான் தொடர்ந்து கட்சியின் தலைவராக இருப்பதாகவும், 2026 தேர்தல் கூட்டணி முடிவுகளை தானே எடுப்பேன் என்றும் உறுதியாகக் கூறினார். எனவே, பாமகவில் குழப்பங்கள் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், சௌமியா அன்புமணி, கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கடம்ப புலியூர் கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் ஜூன் 26, 2025 அன்று கலந்து கொண்டார்.
பாமகவின் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரான சௌமியா, இந்த நிகழ்ச்சியில் புதுமணத் தம்பதிகளுக்கு கட்சி சார்பில் பரிசுகள் வழங்கினார். பின்னர் பேசிய அவர், “திருமணமான பெண்கள் தங்கள் மாமனார், மாமியாரை மதிக்க வேண்டும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து, விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக வாழ வேண்டும்,” என்று அறிவுரை வழங்கினார். சௌமியாவின் இந்த அறிவுரை, ராமதாஸ் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாகவும், குடும்ப உறவுகளிலும் ஏற்பட்டிருக்கும் பிளவுகளை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025