ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!
ஈரானில் மருத்துவ மாணவர்களின் விடுதி மீது, நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் : ஈரான் – இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தெஹ்ரானில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர்கள் சிலர் காயமடைந்ததை ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் உறுதிப்படுத்தியது.
தெஹ்ரானின் கேஷாவர்ஸ் தெருவில் உள்ள மருத்துவ மாணவர்களின் விடுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆம், டெல்லியில் உள்ள ஈரானிய தூதரகம், இஸ்ரேல் தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயமடைந்ததாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீண்டும் அழைத்து வருவதற்கு ஆபரேஷன் சிந்துவ தொடங்குவதாக இன்று மத்திய அரசு அறிவித்தது.
முதல் கட்டத்தில், 110 இந்திய மாணவர்கள் வடக்கு ஈரானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நேற்றைய தினம் தரைவழியாக ஆர்மீனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் இன்று (ஜூன் 18) இந்திய நேரப்படி 2:55 மணிக்கு சிறப்பு விமானத்தில் யெரெவனில் இருந்து விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும், அவர்கள் நாளை (ஜூன் 19) அதிகாலையில் புது டெல்லியில் தரையிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு நிலைமையைக் கண்காணித்து உதவி வழங்க புது டெல்லியில் 24×7 கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு அமைத்துள்ளது.