போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமா என்ற கேள்விக்கு “நான் அதைச் செய்யலாம், நான் அதைச் செய்யப் போவதில்லை என்று சூசகமாக பதிலளித்துள்ளார்.

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக அறிக்கையின்படி, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இணைவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாகதகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான 6வது நாள் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டில் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் 64 வீதம் பேர் போருக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்துமா என்பதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ மறுத்துவிட்டார்.
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமா என்ற கேள்விக்கு, டிரம்ப் ஒரு புன்னகையுடன், “நான் அதைச் செய்யலாம், நான் அதைச் செய்யாமல் இருக்கலாம். அதாவது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக, ஈரான் தலைவர் இன்றைய தினம் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளிக்கையில், ‘இஸ்ரேல் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது, அதற்கான தண்டனையை கொடுப்போம். அமெரிக்க ராணுவத்தின் எந்த ஒரு விதமான தலையீடும், சந்தேகத்துக்கு இடமின்றி சீர்படுத்த முடியாத அளவுக்கு பெரும் சேதத்தை சந்திக்கும்.
ஈரானையும், அதன் மக்களையும், அதன் வரலாற்றையும் அறிந்தவர்கள் ஒருபோதும் இந்த நாட்டுடன் அச்சுறுத்தல் மொழியில் பேச மாட்டார்கள், ஏனென்றால் ஈரானியர்கள் சரணடைபவர்கள் அல்ல. மேலும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் சரிசெய்ய முடியாத பெரும் சேதத்தை சந்திக்கும்” என்றார்.
ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் கமேனி பதில் எச்சரிக்கை விடுத்தார்.