”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!
நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஈரான் தலைவர், 'ஈரான் சரணடையாது' என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை தாக்கும் என அஞ்சப்படுவதால், போர் இன்னும் தீவிரமடையும் நிலையில், மக்கள் தான் பாதிக்கப்பட உள்ளனர்.
ஈரானில் தொடர்ச்சியாக இஸ்ரேல் தாக்கும் நிலையில் கமேனி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘ஈரான் உடனடியாக சரணடைய வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவுறுத்திய நிலையில் ஈரானிய தலைவர் ஆயத்துல்லா காமேனி பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்றைய தினம், அமரிக்க அதிபர் ட்ரம்ப், “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பதை அமெரிக்கா நன்கு அறியும். அவரை இப்போதைக்கு நாங்கள் கொல்லப்போவதில்லை, ஈரான் மக்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுவதையும் நாங்கள் விரும்பவில்லை. எனவே, ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, ஈரான் தலைவர் இன்றைய தினம் ஒரு தொலைக்காட்சி பேட்டியளிக்கையில், ‘இஸ்ரேல் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது, அதற்கான தண்டனையை கொடுப்போம். அமெரிக்க ராணுவத்தின் எந்த ஒரு விதமான தலையீடும், சந்தேகத்துக்கு இடமின்றி சீர்படுத்த முடியாத அளவுக்கு பெரும் சேதத்தை சந்திக்கும்.
ஈரானையும், அதன் மக்களையும், அதன் வரலாற்றையும் அறிந்தவர்கள் ஒருபோதும் இந்த நாட்டுடன் அச்சுறுத்தல் மொழியில் பேச மாட்டார்கள், ஏனென்றால் ஈரானியர்கள் சரணடைபவர்கள் அல்ல. மேலும், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் சரிசெய்ய முடியாத பெரும் சேதத்தை சந்திக்கும்” என்றார்.
ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் கமேனி பதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.