இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக கட்சியின் எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறிய டெல்லி காவல்துறை மற்றும் 3 மாதங்கள் ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், டெல்லியில் பாஜக எம்.பி.க்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டம் குறித்த கேள்விக்கு பிசிசிஐ முன்னாள் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி பதில் அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய கங்குலி ” அது அவர்களுடைய யுத்தம் அவர்கள் சண்டையிடட்டும். உண்மையாகவே அங்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. நான் செய்தித்தாள்களில் படித்தேன். விளையாட்டு உலகில், தெரியாத ஒன்றைப்பற்றி பேசக்கூடாது என்பதை நான் கற்றுக்கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.
unknown nodeஏற்கனவே, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு சானியா மிர்சா, இர்பான் பதான், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், ஆகியோர் ஆதரவு கூறி கருத்து தெரிவித்துள்ள நிலையில், கங்குலி இப்படி பேசியுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றம் நேற்று வழக்கை முடித்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
