மகாராஷ்டிரா பேருந்து விபத்து..! ஓட்டுனர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!

மகாராஷ்டிராவில் பேருந்து விபத்தின் போது பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்துள்ளதாக தடயவியல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூலை 1ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து புனே நோக்கி 33 பயணிகளுடன் புல்தானாவில் உள்ள சம்ருதி மகா மார்க் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தில் உள்ள டீசல் டேங்க் திடீரென்று தீப்பற்றி எரிந்த நிலையில், பேருந்து முழுவதும் தீ பரவி மூன்று குழந்தைகள் உட்பட பேருந்தில் பயணத்தை 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் படுகாயம் அடைந்த நிலையில் புல்தானா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் விபத்து நடந்தபோது பேருந்து ஓட்டுநர் டேனிஷ் ஷேக், மது போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில், ஓட்டுநரின் ரத்த மாதிரியில் 0.30 சதவீதம் ஆல்கஹால் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், விபத்து நடந்த 12 முதல் 13 மணி நேரத்திற்குப் பிறகு ஓட்டுநரின் இரத்த மாதிரி எடுக்கப்பட்டதால் ஆல்கஹால் சதவீதம் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், கவனக்குறைவாக பேருந்தை ஓட்டியதற்காக டேனிஷ் ஷேக் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.