வானத்தில் குலுங்கிய விமானம்.. அனுமதி கேட்ட இந்தியா.. அனுமதி மறுத்த பாகிஸ்தான்! – திடுக்கிடும் தகவல்
பாகிஸ்தான் வான் பரப்பை பயன்படுத்த அனுமதி கேட்டதற்கு, லாகூர் வான் நிலையம் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

டெல்லி : கடந்த 21-ம் தேதி டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 220 பேருடன் புறப்பட்ட 6E 2142 இண்டிகோ விமானம் நடுவானில் ஆலங்கட்டி மழையில் சிக்கி சேதமடைந்தது.
திடீரென எதிர்ப்பட்ட ஆலங்கட்டி புயலால் நடுவானில் விமானம் குலுங்கியதால் அவசரக் கால அனுமதிக்கு பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அணுகியபோது, லாகூர் வான் போக்குவரத்து மையம் அனுமதி மறுக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக விமானிகள் கடும் போராட்டத்துக்கு பிறகு, 220 பயணிகளுக்கு பாதிப்பின்றி ஸ்ரீநகரில் தரையிறக்கி இருக்கின்றனர். அந்த விமானத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவசரக் காலத்தில் இப்படி நடந்துக் கொண்ட பாகிஸ்தான் மீது நெட்டிசன்கள் பலரும் தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் பயங்கரவாதிகளால் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான விரோதப் போக்கைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கான தனது வான்வெளியை மூடியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் விமானங்களும் இந்திய வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.