டெஹ்ரானில் இருந்து உடனடியாக அனைவரும் வெளியேறுங்கள்! அலர்ட் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!
நான் கையெழுத்திட சொன்ன அணுசக்தி 'ஒப்பந்தத்தில்' ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைவரும் உடனடியாக டெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே, இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதன் காரணமாக, ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து அமெரிக்காவும் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேறுங்கள் என அறிவித்துள்ளது. அதிபர் டிரம்ப், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தவறியதாக குற்றம் சாட்டியுள்ளார். “நான் கையெழுத்திட சொன்ன அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானது என அவர் வலியுறுத்தினார்.
ஈரானின் தற்போதைய போக்கு மனித உயிர்களை வீணாக்கும் செயல் என டிரம்ப் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.அது மட்டுமின்றி, அந்நாட்டின் அணு ஆயுத முயற்சிகள் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் எனவும், இதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.”ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது,” என டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, ஈரானுடனான பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனால், பிராந்தியத்தில் மேலும் மோதல்கள் தீவிரமாக வெளிப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அதே சமயம், டெஹ்ரானில் உள்ள பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு கருதி நகரை விட்டு வெளியேறுவது குறித்து அவசர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க துணை தூதரகம் சேதம் அடைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரான் தலைநகரில் குறைந்தது 73 பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் எஸ்மாயில் பக்காய் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.