30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக்… ஆந்திராவில் அதிரடி கைது!
அத்வானி ரத யாத்திரை வழக்கில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக் ஆந்திராவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 1995 முதல் பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளில் தொடர்புடைய இவர், 2011இல் மதுரை-திருமங்கலம் வழியாக முன்னாள் பிரதமர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையின் போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் முக்கிய தேடப்பட்டவர் ஆவார்.
அபுபக்கர் சித்திக்குடன், திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த மற்றொரு தீவிரவாதி முகமது அலியும் கைது செய்யப்பட்டார். இவர்கள் 1995இல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலக வெடிகுண்டு வெடிப்பு, நாகூர் தங்கம் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டு வெடிப்பு, 1999இல் சென்னை, திருச்சி, கோவை, கேரளா உள்ளிட்ட 7 இடங்களில் குண்டு வைத்த வழக்கு, 2012இல் வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை, மற்றும் 2013இல் பெங்களூர் பாஜக அலுவலக வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படை, பல மாதங்களாக இவர்களைத் தேடி வந்த நிலையில், பெங்களூரில் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து ஆந்திராவில் பொறிவைத்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தக் கைது, 1990களில் தென்னிந்தியாவை உலுக்கிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
அபுபக்கர் சித்திக் நாகூரைச் சேர்ந்தவர், முகமது அலி திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் கைது, தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத எதிர்ப்பு முயற்சிகளில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது, மேலும் இது தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.